திங்கள், 3 ஜூலை, 2017

பெண்ணின் பெருமை - கருத்துரை

மனச்சகதியின் தகாத நாற்றங்களை அப்புறப்படுத்திவிட்டு மெல்லிய உணர்வலையூட்டும் நறுமணத்தைப் பரவச்செய்வதில் இந்தப் புத்தகம் இயன்றளவு முயன்றிருக்கிறது

எந்த நூல்களை வாசிக்கலாமென்று எவரிடத்திலும் பரிந்துரை கேட்பதில்லை. ஏனென்றால், நான் தேர்ந்தெடுக்கும் நூல்களைவிட, என்னைத் தேர்ந்தெடுக்கின்ற நூல்கள் ஓரளவேனும் ஓர்ந்துகொள்கின்றன என்பதை உணர்ந்துள்ளேன்.

பத்தாண்டுகளுக்கு முன் 'புதிய குழந்தை' என்றொரு நூலை அண்ணன் செல்வகோ மதி வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தான். பொழுதுபோகாத ஒருநாளில் அதைப் புரட்டி பார்க்க நேர்ந்தபோது உள்ளச்சுவரெங்கும் அதிரும் கருத்துவீச்சுகளை எதிர்கொண்டேன்.

ஒரு குழந்தை எப்படியெல்லாம் வளர்க்கப்படுகிறது, அது வளர்ச்சி என்ற பெயரில் எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது, எவ்வளவு அதிமுகாந்திரமுள்ள வளர்கலையோடு குழந்தையாவும் வளர்க்கப்பட வேண்டும் என அதுகாறும் அவதானிக்கப்படாத முறையில் அறிவின்மை சருகுகளைக் கொளுத்தியது அந்தப் புத்தகம்

இப்படித்தான் ஓசோ எனக்கு அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு ஏதோ ஒரு சாமியார் என்றே நினைத்ததுண்டு. ஆனால், இந்தியத்துணைக்கண்டத்தின் முதல் ஆடம்பரச் சாமியார் அவரே! அவரைப் பின்பற்றியே இன்றுவரை இத்தனை போலிகள் குவிந்துள்ளனர்.

ஓர் ஐந்து நூல்கள் மட்டுமே அவருக்கும் எனக்குமான தொடர்பு தொடுத்தவை. அதில் கடைசி இரண்டு நூல்கள் பள்ளிக்காலந்தொட்டு நண்பர்களோடு கலந்தரட்டையிட்ட கருத்தியலுக்கு விளக்கமளிப்பதாகவே அமைந்தது. ஏற்கனவே, எங்கள் கரிசற்காட்டு மண்வாழ்க்கையினூடாகவும் இறைவிகள் சூழ்ந்த பெண்வாழ்க்கையினூடாகவும் நான் கண்டுணர்ந்தவற்றை ஓசோ என் தலைவருடி தக்கப்பாடம் நடத்தினார்.

அவை : பெண்விடுதலை -ஒரு புதிய தரிசனம் மற்றும் பெண்ணின் பெருமை .

இவ்விரண்டும் ஏதோ பெண்ணைப் பேசும் பெண்ணிய நூல்கள் என்று தலைப்பைக் கொண்டு தள்ளுவோமெனில் அது மூடத்தனம் ஆகிவிடும். ஆண் -பெண் பற்றிய உளவியலை தெள்ளத்தெளிவாக பேசிவரும் போதெல்லாம் ஆணியக்கருத்தாக்கம் பெண்வாழ்வின் மீது காலந்தோறும் நிகழ்த்திவரும் தாக்குதலையும் அதைத் தடுக்க தவறான வழிகாட்டலால் பெண்ணியம் பிறழ்ந்து நின்று வெறித்தனம் பூண்டு இயங்குதலையும் அறியத் தருகிறார்.

பெண்ணின் பெருமை என்ற இந்நூல் அன்பு பற்றியும் தாய்மை பற்றியும் தத்துவக்காற்றை வீசி புனித மானுடவியல் நோக்கி மனிதச்சேர்க்கைக்கு வழிதருகிறது.

உண்மையில் ஈ.வெ.ராமசாமியை விட பன்மடங்கு பகுத்தறிவாளர் ஓசோ என்பதை ஓங்குகுரல் கொண்டு சொல்லிவிட வேண்டும். ஏனென்றால், இயற்கையின்வழி பொருத்தி பெண்ணின் வாழ்வியலைப் பண்படுத்த ஏராளமாக பேசியுள்ளவர் ஓசோ தான்.

அன்பின் கொண்டாட்டம் அனைவரையும் தழுவட்டும்

                           

2 கருத்துகள்: