வெள்ளி, 3 ஏப்ரல், 2020

இராமன் ஓர் அசைவப்பிரியன்

இராமாயணமும் லங்கையும் என்ற ஆங்கில நூலை 1940 ஆம் ஆண்டு டி. பரமேசுவர ஐயர் எனும் ஆய்வாளர் எழுதியுள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இராமாயணக்கதைகளையும் ஆய்வு செய்து அவற்றினடிப்படையில் இராமன் ஒரு மதுப்பிரியராகவும் இறைச்சி விரும்புபவராகவும் காட்டுகிறார்.


வில்வித்தையை விரும்பி புரிந்த வில்லாளியான இராமன் மாமிசத் தேவைகளுக்காகவே வேட்டையில் வேட்கை மிக்கவனாக இருந்துள்ளான். அவன் மனம், தசைத் திரட்சிமிக்க உடற்கட்டோடு இருந்ததெல்லாம் இறைச்சிக்காக வேட்டையாடிய விளைவால் வந்தவையே என்கிறார். (பக்கம் 129)

"கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டியபோது திரும்பி அயோத்தியிருக்கும் திசைநோக்கி இராமன் தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்போது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டையாடப் போகிறேன்? இந்த வேட்டை இராஜரிஷிகள் சம்மதித்தல்லவா? ( அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27).

"விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான்- காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டுமே புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் " என்று கூறுகிறான். (அயோத்யா காண்டம் சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29) நூலின் பக்கம் -130.

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது இராமனின் மனைவி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் மதுவும் இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள் நுழைந்த அன்று, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப்பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக இராமனும் இலட்சுமணனும் வில் அம்போடு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டுவந்து ஒரு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டனர். (சர்க்கம் 52 பாடல் 102) சுவையான இறைச்சியை சீதைக்குத் தந்து அவளை இராமன் திருப்திபடுத்தினான். (சர்க்கம் 96 பாடல் 1).

இத்தோடு முடியவில்லை இறைச்சிப்படலம்! மாறுவேடத்தில் வந்த இராவணனுக்குக்கூட சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்! என் கணவர் விரைவில் வந்துவிடுவார். காட்டுப்பொருட்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி,காட்டுப்பன்றி கொண்டு வருவார். இஷ்னுமான் (முதலை முட்டை தின்னும் விலங்கு) கொண்டு வருவார். (ஆரண்ய காண்டம் சர்க்கம் 47, பாடல்கள் 22,23)

இப்படி இராமன் இறைச்சியுண்டதை ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடவில்லை வால்மீகி. பல்வேறு இடங்களில் இறைச்சியையே இராமன் தேடித்தேடி விரும்பி உண்டதாக வலியுறுத்திச் சொல்கிறார். வால்மீகியும் ஒரு வேடனென்பதால் வேட்டையாடிய இராமனையும் அவன் இறைச்சிப்பிரியனாக இருப்பதையும் சொல்லி சிலாகித்து எழுதுகிறார்.

இராமனின் பெயரால் நிகழும் தூய பிம்பங்களும் மாட்டிறைச்சி அரசியலும் இராமகாதைகளுக்கு முற்றிலும் முரணானவை. இராமனைத் தமிழுக்குக் கொண்டு வருகிற கம்பன் தன் மொழியாளுமையால் அப்போது தமிழகத்தில் நிலவிய புலாலுண்ணாமையை இராமாயணத்தில் எழுதுகிறார்.

இறைவனுக்குரிய எந்த இலக்கணத்திற்குள்ளும் இல்லாத இராமனைக் கம்பன் தன் கவித்திறத்தால் கடவுளாகக் கட்டமைக்கிறார். ஒழுக்கமற்றுத் திரிந்த வடக்கத்திய கதைபாத்திரத்தைத் தமிழாய்ந்து எழுதுகிறபோது ஒழுக்கத்தின் விழுமியங்களை ஒப்பேற்றி வைக்கிறார் இராமன் மீது.

கம்பராமாயணம் தமிழ் இலக்கியப்பெருங்கடலில் மிக முக்கியமானது. எண்பதாயிரம் எதுகை, மோனைத்தொடைகளோடும் கணக்கில்லாத கவியுறைந்த உவமைகளாலும் கம்பராமாயணத்தில் தமிழை இறைத்து நிரப்புகிறார். பத்து எதுகைக்கே படுத்துவிடுகிற பாவலர்களில் ஆயிரக்கணக்கான எதுகைகளோடு எக்காளமிடுகிறது கம்பன் கைவிரல் பிடித்த எழுத்தாணி!

ஆளாளுக்கு இராமாயணத்தை வளைத்தெழுதிய பின்பு கம்பனைக் கடைத்தேற்றிவிடக் கருதாத கவிஞர்கூட்டம் காலமைதி கொண்டுவிட்டது. மீண்டும் இராமாயணத்தை எழுதத் தொடங்கினால் அதில் வரலாற்று நாயகனாக கலைபத்தில் தலைசிறந்த இராவணன் கதைநாயகனாக விளைந்தெழுவான். 

குடைவரை அடைமழை


கரிசல்நிலத்தின் விரிசல்கழனியாய் வீணாய்க்கிடந்தேன். வந்து போன வாடைக்காற்றுக்கெல்லாம் ஓடைக்கூச்சலுக்குண்டான உற்சாகப்போலி காட்டிக்கொண்டிருந்தேன்.

இம்மியளவு ஈரக்கசிவு இதயத்துகளை நனைத்துவிடாதாவென கும்மிக்கும்பிட்டு கூனிக்குறுகிப் போயிருந்தன என் ஏக்கமுதுகெலும்பு! 

ஆயுட்காலத்து அடைமழையோடு நீ மட்டும் வந்துசேராவிடில் பாளம் பாளமாய் வெடித்து பாழாய்ப் போயிருக்கக்கூடும் உடலுழுவயல்! நீ தந்த ஈரத்தழுவலில் தான் என் உயிர்க்கூடு நெடுநாளாய் அரிக்காமல் அடைகாத்த நெல்மணிகள் வேர்விடத் தொடங்கின. 

உன் தேகம் என் மோகத்தோடு மோதி மோதி எப்போதும் முப்போகம் விளையக் காத்திருக்கிறது அளவெடுத்த அங்கம் ஒன்று, யாழ்மீட்டும் விரல்போல் சூலில் நின்று!

தூங்காத இரவிலொருநாள் தாங்கொணாக் களைப்பிலிருந்த பொழுது பூங்காற்றாய் அங்கம் தழுவினாய்! கழுவாத என் பிறவியழுக்கை அத்தழுவல் தான் முழுதாய் தூய்மை செய்தது. 

தேனில் விழுந்த மீன்போல தேகமெல்லாம் இனிக்கக் களித்தேன். திளைக்கத் திளைக்க நான் திகட்டிக்கொண்டிருந்த போது பூவிரல் நீட்டி புத்துணர்ச்சி புகட்டத் தெரிந்தது உனக்கு.

எப்போதும் சொல்வேன் அந்தப் புத்துணர்ச்சிக்கு ஆயிரக்கலவியின் ஆற்றல் இருந்தது என்று!

திருந்துவதும் வருந்துவதும் தீயப்பழக்கமென இருந்த எனக்குள் மருந்தென வந்து மகத்துவம் செய்தவள் நீ! தீராச் சோகத்தினடியில் மீளாச் சிறைபோல் அடைபட்டுக் கிடந்தவனை நம்பிக்கைச்சொல்லடுக்கி மீட்டுவிட வந்தவள் நீ! குற்றவுணர்ச்சி தவிர்த்து மற்றவுணர்ச்சிக்கெல்லாம் மனங்கொடுத்து அலைந்தவனை இனங்கண்டு இழுத்துக்கொண்டு இளைப்பாற வைத்தவள் நீ!

வேக்காட்டில் வெருண்டு சாக்காடன்றி சாகக்கிடந்தவனை உன் உள்ளங்கை குளிர்வில் பூக்காடு பார்க்க புத்துயிர் ஊட்டியவள் நீ! மௌனக்குழியில் மரணக்கிடக்கில் சரணடைந்து போனவனை வார்த்தைகளில் தீர்த்தந்தெளித்து கெடுதலைத் தடுத்து விடுதலை தந்தவள் நீ!

நீயென்பது நீ மட்டுமில்லை நானும் சேர்ப்பென்ற செம்மையான வார்ப்புக்கு செப்பனிட்டுக் கொடுத்தவள் நீ! வாடிக்கிடக்கும் வாலிபத் திசுக்களைக் கூடிக்களித்து கொண்டாட முடியுமென்ற நாடிக்கணக்கை நடைமுறைபடுத்தியவள் நீ! 

வியாழன், 2 ஏப்ரல், 2020

களிற்றுத்துன்பம்

கூர்தீட்டிகளால்
கொலையுண்டுபோன
யானைகளின் கதறல்
கானத்தை அரற்றியது!

திடுக்கிட்டெழுந்த
என் கனவுக்குள்
அந்தக் கதறல்
கேட்டுக்கொண்டேயிருந்தது!

ஏனிந்த தொல்லை?
எங்கோ விழுந்த அடிகளும்
குத்திக் கிழித்த காயங்களும்
என் நினைவுக்கடியில்
நெருஞ்சிமுட்களை
ஏன் தூவிப்போகின?

பழைய நாட்களுக்குள்
காலப்பயணம்
போய் வந்த நாளொன்றில்
கண்டுகொண்ட உண்மைக்கு
களிறுபட்ட துன்பத்தின் சாயல்!

பெண்வாழ்க்கையோடு
பெரும்பாடு துயரங்களுக்கெல்லாம்
விலங்கொடு அனையும்
விந்தை இருக்கிறது தான்.!

நான்பட்ட பாடுக்கு
யானை வாழ்க்கை போலும்!