எட்டு வருசம்
கெட்டவன்
எள்ளு போடு!
பத்து வருசம்
கெட்டவன்
பருத்தி போடு!
சொலவம் சொன்ன
அப்பத்தாவிடம்
கேட்டேன்
எத்தனை வருசம்
கெட்டான் பாட்டன்
தூக்கு போட?
அறுவடைத்திருநாளின் கொண்டாட்டத்திற்கு அணியமாகிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களில் உழவப்பெருமக்கள் உயிர்விட்டிருப்பதை ஏதோவொரு செய்தியைப் போல் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதிர்வரும் நாளொன்றின் பசியை வயிற்றுக்குள் நினைவுபடுத்தி வலி தரும் எச்சரிக்கையாகத் தெரிகிறது. தமிழீழத்தில் ஓராண்டுக்குள் ஒட்டுமொத்த இனமும் அழித்தொழிக்கப்பட்டதைக் கண்டு, கதறி, கதியிழந்தபின் மரணம் என்பதே மரத்துப்போன ஒன்றாகிவிட்ட சூழலிலும் ஓர் உழவனின் சாவு இயல்பாக கடந்துபோக மறுக்கிறது.
உழுதுண்டு வாழ்பவனின் கண்ணீர் அவனைத் தொழுதுண்டு வாழ்வோர்க்குத் தெரியாமலேயே போய்விடும்போது, சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் நம்மைச் சபிப்பதாகவேபடுகிறது. இங்குலவும் ஒவ்வொருவரின் உணவுக்கும் உற்பத்திப்பொருள் அனுப்புபவன், ஏதோவொரு சிற்றூரில் வெயிலில் தோய்ந்து, மழையில் நனைந்து, வியர்வை சிந்தி, வெம்பாடுபட்டு விளைச்சல் பெருக்குவதற்கு அல்லோலப்படுகிறான் என்ற பாடம், பசியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் படிப்பிக்கப்பட வேண்டும். ஆனால், கத்தரி -வெண்டை காய்கனிகளைக் காசு கொடுத்தால் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்; உழவுக்குத் தண்ணீரின்றி வயல்கள் கருகிப்போவது பற்றி, மற்ற வேலைசெய்வோர் கவலைப்பட ஏதுமில்லை என்ற அசட்டுத்தனமான போக்கு, விவசாயிகளில்லாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அது எவ்வளவு ஆபத்தானது என்பதை இங்கெவரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
விவசாயியின் சாவு
வேர்களின் சாவு!
இனி
கிளைகளில்
உங்கள் கனிகளில்லை!
இலைகளில்
உங்கள் நிழலுமில்லை!
சாண்ட்விச்
சாப்பிடுபவரா நீங்கள்?
வெள்ளரி விவசாயி
தூக்கிடும் முன்னாவது
காப்பாற்றுக!
அஃதெதற்கு
அலைச்சல்?
கடைகளில்தானே
காய்கறி வாங்குவீர்!
குழந்தைப்பசிக்கு
கவலை வேண்டா!
குர்குர்ரே பொட்டலம்
கொடுத்தால் போதும்!
இறுதி விளைச்சல்
உறுதியாகிவிட்ட பின்
உங்கள் வீட்டின்
கடைசி அரிசியைக்
காப்பாற்றிக்கொள்க!
இனி
உணவென்பது
உழவில் வராது!
உழவனின் கடைசி
அழுகையில்
அரசின் ஆண்மை
கரைந்துபோனது!
இனி
சமைக்கும்போது
உப்பைக் கூட்டுக!
கழனியில் விழுந்த
கண்ணீர் குறைந்தது!
யாரிந்த உழவன்? மளமளவென்று பெருகிக்கிடக்கும் மானுடச்சமுத்திரத்தில் அவன் பங்களிப்பு யாதென்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. நாமோ உணர்வற்ற எந்திரங்களாக நகர்ந்து கடந்து போய்க்கொண்டே இருக்கின்றோம். 'படியளப்பான் பரமன்' என்னும் வழிபாட்டுமொழியை உற்றுப்பார்த்தால் அந்தப் பரமனுக்கும் படியளப்பவன் இந்த உழவுக்காட்டுப் பாமரன் தான் என்பதே உண்மை.
மலைக்காடுகளில் வாழ்ந்தபோது தன் அன்றாடப்பசிக்கு அலைந்து தேடியவன், ஆற்றுச்சமவெளிக்கு நகரத் தொடங்கினான். ஆங்கே பறவையோ, காற்றோ பரப்பிய விதைத்தலின் நாற்றுவிளைச்சலை உண்டபின் நின்று நிலைக்க வேண்டுமென்று வேளாண்மை பழகினான். காட்டுக்குள் காய் பறித்து, கனி பொறுக்கி, கிழங்கு அகழ்ந்து பசியாற்றியதெல்லாம் இயற்கை தாமாக செய்த வேளாண் விளைச்சல்! ஆனால், மனிதன் அதைப் பழக்கிப்பார்க்க விழையும்போது நிறையவே தோல்வி கண்டான். பருவம் அறியவும் பயிர்கள் விளையவும் இயற்கை போட்டு வைத்த கணக்கின் சூத்திரங்களைக் காலங்காலமாகத் தேடித்தேடி பக்குவம் கண்டான்.
எந்த மண்ணில், எந்தப் பருவத்தில், எந்தப் பயிர், எவ்வளவு வளரும் என்பதையும் எந்தப் பயிருக்கு எவ்வளவு நீர், எவ்வளவு உரம் இட்டுப் பார்த்தல் வேண்டும் என்பதையும் அவதானிக்க அவனுக்கு ஆண்டுகள் பல ஆகின.
ஆடிப்பட்டம் தேடி விதை; தும்பி பறந்தால் தூரத்தில் மழை; சோளம் விதைக்க சொல்லி விதை போன்ற சொலவடைகள் உருவானதெல்லாம் அவன் காலங்காலமாக கண்டுணர்ந்த பட்டறிவின் விளைவுகளே! உலகெங்கும் மற்றினத்தார் காட்டுமிராண்டிகளாக அலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இந்த மண்ணில் உழவன் உருவாகியிருந்தான். காட்டைத் திருத்தி கழனி செய்தான். கழனி முழுக்க உழவு செய்தான். உழவு செலுத்தி உணவுப்பயிர் பெருக்கினான். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புமாறு எட்டுத்திசைக்கும் ஏறி கூவினான். வரலாற்றில் அதுவரை அறிமுகமாகாத முதல் நாகரிகத்தை உருவாக்கிக் கொடுத்தான். நாகரிகப் பிழைப்போட்டத்திற்கு நங்கூரமிட்டது அவன் உழவு செய்த நாகரிகம் தான். அந்த நாகரிகத்தொட்டிலில் அடுத்து வந்த நூற்றாண்டுகளைத் தாலாட்டிய தாயுமானவன் இந்த நூற்றாண்டிலோ நாகரிகமற்ற வேலைக்காரனாகவே பார்க்கப்படுகிறான். இதுதான் காலத்தின் கொடுமையாகக் கண்டுணரப்படுவது.
முன்றிலில் கோலமிடும் கொள்கை வகுத்ததன் கதை தெரியுமா? நன்றிக்குரிய பண்பாட்டு வழிமுறைகளில் அது அதிமுக்கியத்துவமானது. மலை குடைந்து, குகை கண்டு குடியிருந்தவன் மலைவிட்டு இறங்கி சமவெளிகளில் உலவியபோது இருப்பின் நிலைகொள்ள, பத்திரமாகப் படுத்துறங்க வீடொன்று தேவைப்பட்டது. செடிகொடி, குச்சிக்கோலென்று பலவகை வீடு பழகி கட்டினான். காற்றுமழைக்குக் காணாமல் போனது. ஆற்றுமணல் அள்ளி வந்து குழைத்தான். குலைந்து போனது. ஈரத்தை இருத்தி வைக்கும் மண்தான் வீடுகட்ட உகந்தது என்பதை உற்றறிந்தான்.
எந்த மண்ணில் ஈரப்பதமிருக்கும்? எறும்புத்திரள் எந்த மண்ணில் ஆண்டுக்கணக்காய்க் கூடிவாழ்ந்து செரிக்கிறதோ, அந்த மண்ணில் தான் உயிர்ப்பசை ஒட்டிக்கிடக்கும்! உலகம் முழுக்க மணலை மண்ணாக்கிய பணியைச் செய்தன எறும்புகள். அப்படி எறும்புகளின் குடியிருப்பு மண்ணள்ளி குழைத்துகட்டி வீடு கண்டான். எறும்பின் வீடழித்து தாம் வீடுகட்டிய குற்றத்திற்குப் பதிலீடு தர எண்ணியவன், அரிசிப்பொடி தூவி கோலம் என்னும் ஓவியக்கலையாக நேர்த்திக்கடன் செலுத்தினான். மண்ணால் வீடுகட்டும் மரபுக்கு ஆதியாய் ஒருவன் அறிவைச் செலுத்தினானே, அவன்தான் கோலமிடும் கோட்பாட்டின் தந்தையாவான்.
உலகின் பசி தீர்க்க பாடுபவன் வயல் வற்றி, வயிறு ஒட்டி, உயிர்விடவும் தள்ளப்படுகிறான். யாரும் உழவர் சாவுக்கு அழ வேண்டா. அவர்கள் செத்துப்போகும் காரணம் தேடி அதுகுறித்து கவலைப்படுங்கள். அதைத் தீர்க்கப் போராட முன்வாருங்கள். இனியொரு உழவர் சாகும்முன் உழவுத்தொழில் வளர்க்க உதவுங்கள்.