கரிசல்நிலத்தின் விரிசல்கழனியாய் வீணாய்க்கிடந்தேன். வந்து போன வாடைக்காற்றுக்கெல்லாம் ஓடைக்கூச்சலுக்குண்டான உற்சாகப்போலி காட்டிக்கொண்டிருந்தேன்.
இம்மியளவு ஈரக்கசிவு இதயத்துகளை நனைத்துவிடாதாவென கும்மிக்கும்பிட்டு கூனிக்குறுகிப் போயிருந்தன என் ஏக்கமுதுகெலும்பு!
ஆயுட்காலத்து அடைமழையோடு நீ மட்டும் வந்துசேராவிடில் பாளம் பாளமாய் வெடித்து பாழாய்ப் போயிருக்கக்கூடும் உடலுழுவயல்! நீ தந்த ஈரத்தழுவலில் தான் என் உயிர்க்கூடு நெடுநாளாய் அரிக்காமல் அடைகாத்த நெல்மணிகள் வேர்விடத் தொடங்கின.
உன் தேகம் என் மோகத்தோடு மோதி மோதி எப்போதும் முப்போகம் விளையக் காத்திருக்கிறது அளவெடுத்த அங்கம் ஒன்று, யாழ்மீட்டும் விரல்போல் சூலில் நின்று!
தூங்காத இரவிலொருநாள் தாங்கொணாக் களைப்பிலிருந்த பொழுது பூங்காற்றாய் அங்கம் தழுவினாய்! கழுவாத என் பிறவியழுக்கை அத்தழுவல் தான் முழுதாய் தூய்மை செய்தது.
தேனில் விழுந்த மீன்போல தேகமெல்லாம் இனிக்கக் களித்தேன். திளைக்கத் திளைக்க நான் திகட்டிக்கொண்டிருந்த போது பூவிரல் நீட்டி புத்துணர்ச்சி புகட்டத் தெரிந்தது உனக்கு.
எப்போதும் சொல்வேன் அந்தப் புத்துணர்ச்சிக்கு ஆயிரக்கலவியின் ஆற்றல் இருந்தது என்று!
திருந்துவதும் வருந்துவதும் தீயப்பழக்கமென இருந்த எனக்குள் மருந்தென வந்து மகத்துவம் செய்தவள் நீ! தீராச் சோகத்தினடியில் மீளாச் சிறைபோல் அடைபட்டுக் கிடந்தவனை நம்பிக்கைச்சொல்லடுக்கி மீட்டுவிட வந்தவள் நீ! குற்றவுணர்ச்சி தவிர்த்து மற்றவுணர்ச்சிக்கெல்லாம் மனங்கொடுத்து அலைந்தவனை இனங்கண்டு இழுத்துக்கொண்டு இளைப்பாற வைத்தவள் நீ!
வேக்காட்டில் வெருண்டு சாக்காடன்றி சாகக்கிடந்தவனை உன் உள்ளங்கை குளிர்வில் பூக்காடு பார்க்க புத்துயிர் ஊட்டியவள் நீ! மௌனக்குழியில் மரணக்கிடக்கில் சரணடைந்து போனவனை வார்த்தைகளில் தீர்த்தந்தெளித்து கெடுதலைத் தடுத்து விடுதலை தந்தவள் நீ!
நீயென்பது நீ மட்டுமில்லை நானும் சேர்ப்பென்ற செம்மையான வார்ப்புக்கு செப்பனிட்டுக் கொடுத்தவள் நீ! வாடிக்கிடக்கும் வாலிபத் திசுக்களைக் கூடிக்களித்து கொண்டாட முடியுமென்ற நாடிக்கணக்கை நடைமுறைபடுத்தியவள் நீ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக