வியாழன், 5 ஜனவரி, 2017

நீ நான் நாம்



உன் களைப்பின்
இளைப்பாறுதலாய்
எப்போதும் இருப்பேன்!

என் இதயத்துடிப்பொலிகூட
இடையூறாயிருக்காது!

உனக்கான
சுதந்திரத்தை
நானென்ன ஒதுக்குவது?

உன்னில் நான்
நேசிப்பதே உன்
சிறகுகளைத்தான்!

பரந்து பறந்து வா!

என்
அன்பின் கிளைகள்
காத்திருக்கின்றன ...
*****



உன்னோடு
உரையாட
உவகை மிகுதி!
நீயோ
அதை
மௌனத்தின்
நகங்களால்
உருக்குலைக்கிறாய்!

காலக்கிணற்றில்
விழுந்த
தவளையாய்க்
கத்திக்கொண்டிருக்கின்றது
உனக்கான
உரையாடல்!
*****


என்னோடு நீ
முரண்படுவதில்
வியப்பேதுமில்லை!

என்னோடு நானே
முரணாகிதான்
என்னைப்
புதுப்பிக்கிறேன்...

முரண்படுதல் நலம்!
*****



உனக்காக
காத்திருப்பதில்
என் நாட்கள்
ஆகிப்போன அவலம்!

இரவுகளை
விழுங்கிவிடும்
பகல்கள் ;

பகல்களை
வாந்தியெடுக்கும்
இரவுகள்!

*****

காதலென்பது
கனவுகளில் மிதப்பதெனக்
கவிஞர்கள் சொல்லக்கூடும் ;

அஃதில்லை அன்பே!

எதார்த்தத்தில்
இறங்கி நடப்பதுவே...

வா!
ஒரு பொடிநடை
போய் வரலாம்... 😘😘🏃🏃

2 கருத்துகள்: