உன் களைப்பின்
இளைப்பாறுதலாய்
எப்போதும் இருப்பேன்!
என் இதயத்துடிப்பொலிகூட
இடையூறாயிருக்காது!
உனக்கான
சுதந்திரத்தை
நானென்ன ஒதுக்குவது?
உன்னில் நான்
நேசிப்பதே உன்
சிறகுகளைத்தான்!
பரந்து பறந்து வா!
என்
அன்பின் கிளைகள்
காத்திருக்கின்றன ...
*****
உன்னோடு
உரையாட
உவகை மிகுதி!
நீயோ
அதை
மௌனத்தின்
நகங்களால்
உருக்குலைக்கிறாய்!
காலக்கிணற்றில்
விழுந்த
தவளையாய்க்
கத்திக்கொண்டிருக்கின்றது
உனக்கான
உரையாடல்!
*****
என்னோடு நீ
முரண்படுவதில்
வியப்பேதுமில்லை!
என்னோடு நானே
முரணாகிதான்
என்னைப்
புதுப்பிக்கிறேன்...
முரண்படுதல் நலம்!
*****
உனக்காக
காத்திருப்பதில்
என் நாட்கள்
ஆகிப்போன அவலம்!
இரவுகளை
விழுங்கிவிடும்
பகல்கள் ;
பகல்களை
வாந்தியெடுக்கும்
இரவுகள்!
*****
காதலென்பது
கனவுகளில் மிதப்பதெனக்
கவிஞர்கள் சொல்லக்கூடும் ;
அஃதில்லை அன்பே!
எதார்த்தத்தில்
இறங்கி நடப்பதுவே...
வா!
ஒரு பொடிநடை
போய் வரலாம்... 😘😘🏃🏃




❤❤
பதிலளிநீக்கு❤❤
பதிலளிநீக்கு