ஞாயிறு, 1 ஜனவரி, 2017

சொல்லாயுதம்

     


சொல்லாயுதம் மாற்றுப்பரிமாணத்தில் செறிவானது!

சல்லிக்கட்டுக்குத் தடை போட்டுவிட்டு தமிழர் தொன்மை அடையாள அழிப்பிற்கான கோரமுகத்தைக் காட்டியவாறும் அதனூடாக நாட்டுமாடுகளின் இருப்பைக் காலி செய்வதாகவும் நேருக்கு நிற்கும் வலிதான அதிகாரம் மற்றும் அமைப்பினை எவ்வாறு எதிர்கொள்வோமென்ற தவிப்பில் இருக்கின்ற வேளையில்,
"தடையை நீக்கு" என்ற சலனமற்ற கூச்சல்களுக்கிடையே ஒற்றைக்குரலொன்று ஓங்கி ஒலித்தது "தடையை மீறுவோம்" என்ற சொல்லாயுதமாய்... வாளின் வீச்சொத்த பேச்சின் பிரளயக்காரன் சீமானின் சீற்றமிகு சொல்லாயுதம் தான் அது!

வெற்று முழக்கமென்று இதை வேடிக்கை பார்த்து வாடிக்கையாய் விமர்சிக்கும் தொண்டைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை இது இந்திய இறையாண்மை மீதெறியப்பட்ட சொல்லாயுதம் என்று!

இறையாண்மை, ஒருமைப்பாடு, சமத்துவம் யாவும் அரசின் அங்கமான மக்களால் உயிர்கொள்பவையே என்ற ஒடுங்குதன்மையோடு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அரசாள்கிற அரைவேக்காடுகளுக்கு முக்கியம்.
உணர்வுகளுக்கெதிராக உந்தப்படுகிற அடக்குமுறையின் முகத்தில் ஒத்துழையாமை எனும் ஓங்கு குரலால் காறி உமிழப்படுகிற எச்சில் துளிகளை அதிகார மையம் அறிந்துகொண்டே தான் இருக்கிறது!

நாட்டின் பொதுஅமைதி, ஒழுங்கைக் கட்டுக்கோப்போடு காப்பாற்றும் பிம்பம் சட்டங்களால் மட்டுமோ,  உறுத்துரைக்கும் உத்தரவுகளால் மட்டுமோ உடையாமலிருப்பதில்லை. மக்களால் மதிக்கப்படுகிறவரை தான் சட்டங்கள் சாகாமலிருக்கக்கூடும் என்பதின் எதார்த்தப்புரிதல், சட்டங்களுக்கிணங்கி வாழும் மக்கள்திரளுக்கு உருவாகிவிட்டால் தானாகவே துலாக்கோலில் சட்டத்தினை நிறுக்கத் தொடங்குவர்.

மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் எழும்புகிற எந்தத் தடையும் நீடித்து நிற்கப்போவதில்லை. ஆகவே, "தடையை மீறுவோம்" என்ற கூற்று தொடர்ந்து செவிப்புலன் கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருக்க, அது இயல்பானதொரு நடவடிக்கையைச் சாத்தியப்படுத்திவிடக் கூடும்.

விளைவுகளை ஏற்படுத்தாத எந்தச் சொல்லும் வீண்! விளைவுகளை ஏற்படுத்தவல்ல எந்தச் சொல்லும் ஆயுதமே!

"தடையை மீறுவோம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக