
நாகரிகம் பேசும்
நல்லோரே!
ஆள்பாதி ஆடைபாதி
என்றீரே!
ஆடைக்கெதற்கு இத்தகு நீதி?
சொல்வீரா?
'உடுக்கையிழந்தவன்
கைபோல'
இந்த உவமை
சுட்டுவதென்ன?
பள்ளிக்கூடத்தில்
முன்வரிசையில்
எழுந்து நிற்கையில்
கிழிந்த உடையுடன்
கூனிக்குறுகி நின்றதுண்டா?
உடை விலகும்
ஒவ்வொரு கணமும்
அவசரமாய்
ஆடை திருத்தும்
பெண்ணவளின் பரபரப்பை
மொழிபெயர்த்து உணர்ந்ததுண்டா?
உடுத்தல்
உறுப்பின் அரணா?
இயற்கையின் முரணா?
ஆடை ஒருபுறம்
அடையாளம்!
மறுபுறம் அவமானம்!
அம்மணமாய்
இருந்தபோது
அவமானம் குறைவுதான்!
அப்படியே
இருந்திருக்கலாம்!
இப்போது
தண்டனை யாருக்குத்
தருவது?
வாருங்கள்!
ஆடையுடுத்திய
ஆதிமனிதனைத்
தோண்டியெடுத்து
தூக்கிலிடுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக