வியாழன், 11 மே, 2017

கேள்வி ஞானம் - வைரமுத்து

தொலைதூர
விமானமா?

தூக்க மாத்திரை
இட்டுக்கொள்

விமானம் விரைந்தால்
தூரம் தெரியாது

விமானம் விழுந்தால்
துக்கம் தெரியாது
````````````````````````````````````````````````````

அடுத்தவன்
மனைவி மேல்
ஆசை கொள்ளாதே

அது
நல்ல பாம்பின்
படத்தை
நாவால் ஸ்பரிசிப்பது
`````````````````````````````````````````````````````

நாற்பது வரை
பணத்தை நீ
தேட வேண்டும்

நாற்பதின் பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்
`````````````````````````````````````````````````````

படுக்கையறையில்...

எழுதுகோல்
தொலை பேசி
எதுவும் வைக்காதே

உன் சுத்தமான சுதந்திரம்
அந்தச்
சுவர்களுக்குள்ளேதான்
````````````````````````````````````````````````````

அறிவாளியாய் இரு
முட்டாளாய் நடி
`````````````````````````````````````````````````````

கன்னக்குழி
அழகென்று
பெண்ணைப்
புகழாதே

அதுவே
உன் சவக்குழியாய்
இருக்கலாம்
``````````````````````````````````````````````````````

சாப்பாட்டு மேஜையும்
கட்டிலும்
தொடமுடியாத
தூரத்தில் இருக்கட்டும்

அந்த தூரம்
உன் ஆயுளின் நீளம்
`````````````````````````````````````````````````````

தும்மல் காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல்
வெளிப்படுத்து

அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்
`````````````````````````````````````````````````````

வாய் நீராடும்
வாய்ப்புள்ள
போதெல்லாம்
சுட்டுவிரல் கொண்டு
தொட்டழுத்து ஈறுகளை

பரவும் ரத்தம் பலம்

ஈறுகெட்டால்
சொல் எஞ்சும்

ஈறு கெட்டால்
பல் எஞ்சுமா?
``````````````````````````````````````````````````````

புதுமனைவியின்
தாய்மை

புதுத்தொழிலில்
லாபம்

இரண்டையும்
மூன்றாண்டு
எதிர்பாராதே
``````````````````````````````````````````````````````

மாட்டுவால் சூப்
மன்மத பானமாம்

துரும்பும் அதனால்
இரும்பாய் மாறுமாம்

இப்போது புரிகிறது

மாடு பிடித்தவனுக்கே
மணமகள் ஏன் என்று
``````````````````````````````````````````

எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்

தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று
``````````````````````````````````````````````````````

நாய் குரைத்தால்
ஓடாதே

அச்சப்படல்
நாய்க்கு
அழைப்பு மடல்

எளியதன் பலவீனம்
வலியதன் பலம்
``````````````````````````````````````````````````````

பயணமா?

பெட்டியிலும்
வயிற்றிலும்
காலியிடம்
இருக்கட்டும்
``````````````````````````````````````````````````````

தடுமனா
மருந்து-சாப்பாடு

காய்ச்சலா
மருந்து - பட்டினி
:````````````````````````````````````````

பெரிய மனித
தரிசனமா?

அதிகாலை போ

இல்லையேல் ..

அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
``````````````````````````````````````````````````````

ரகசியமா?

காதலிக்குச் சொல்

ஒரு காதில் வாங்கி
மறு காதில் விடுவாள்

மனைவிக்குச்
சொல்லாதே

இருகாதில் வாங்கி
வாய் வழி விடுவாள்
``````````````````````````````````````````````````````

பல்துலக்கும் போதே
உன்
சீப்புக்கும் பல் துலக்கு

தலையில் உள்ள
மண்ணுக்குச்
சாட்சி வேறு எதற்கு?
`````````````````````````````````````

உருவு கண்டு எள்ளாதே

ஒவ்வொரு விதையிலும்
ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது

அக்பரின் பிரசவம்
பாலைவனத்தில்
நிகழ்ந்திருக்கிறது.

-வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக