வியாழன், 11 மே, 2017

மருத்துவ அறிக்கை - வைரமுத்து

டாக்டர்

மருத்துவ முறையை
மாற்றுங்கள் டாக்டர்

"வாயைத் திற" என்பீர்கள்
வயிறு தெரியும்படி
வாய் திறப்போம்

"நாக்கை நீட்டு" என்பீர்கள்
கல்கத்தாக் காளியாய்
நாக்கை நீட்டுவோம்

"முதுகைத் திருப்பி
மூச்சிழு" என்பீர்கள்

அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்
அவ்வளவுதான்

அஞ்சேல் என்று
அருள்வாக்குச் சொல்வீர்கள்

வாசிக்க முடியாத கையெழுத்தில்
வாயில் வராத பெயரெழுதிக்
காகிதம் கிழிப்பீர்கள்

மூன்று வேளை..என்னும்
தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தைகளில்
பாடி முடிப்பீர்கள்

போதாது டாக்டர்

எங்கள் தேவை இது இல்லை

நோயாளி பாமரன்
சொல்லிக் கொடுங்கள்

நோயாளி மாணவன்
கற்றுக் கொடுங்கள்

*

வாய்வழி சுவாசிக்காதே

காற்றை
வடிகட்டும் ஏற்பாடு
வாயில் இல்லையென்று
சொல்லுங்கள்

சுவாசிக்கவும்
சூத்திரம் உண்டு

எத்தனை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொட வேண்டும்


தரை எங்கே தொடுகிறது?
தலைதானே தொடுகிறது

சொல்லிக் கொடுங்கள்

*

சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே

கல்லீரல் எரிந்துவிடும்

கல்லீரல் என்பது கழுதை
பாரம் சுமக்கும்
படுத்தால் எழாது
பயமுறுத்துங்கள்

*

ஒருகால் வீக்கம்
உடனே கவனி
யானைக்கால் அறிகுறி

இருகால் வீக்கம்
இப்போதே கவனி
சிறுநீரகத்தில்
சிக்கல் இருக்கலாம்

வாயில் என்ன
ஆறாத புண்ணா?

மார்பகப் பரப்பில்
கரையாத கட்டியா?

ஐம்பது தொட்டதும்
பசியே இல்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா எழுதியிருக்கலாம்.

*

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்

நோயொன்றும் துக்கமல்ல

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தம் அது

சர்க்கரை என்பது
வியாதியல்ல
குறைபாடு என்று கூறுங்கள்

செரிக்காத உணவும்
எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத் தேரின்
சக்கரங்கள் என்று
சொல்லுங்கள் டாக்டர்

*

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளி அற்றவர்

பிணி வந்திறப்பினும்
முனி வந்திறந்ததாய்
முனகுவர்
சொல்லிக் கொடுங்கள்

*

யோகம் என்பது
வியாதி தீர்க்கும்
வித்தை என்று சொல்லுங்கள்
உயிர்த்தீயை உருட்டி உருட்டி
நெற்றிப் பொட்டில்
நிறுத்தச் சொல்லுங்கள்

*

உணவுமுறை திருத்துங்கள்
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு

சொல்லுங்கள் டாக்டர்

*

அவிக்காத காய்களே
அமிர்தம் என்று சொல்லுங்கள்

பச்சை உணவுக்குப்
பாடம் நடத்துங்கள்

மருந்தை உணவாக்காதே
உணவை மருந்தாக்கு

மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியே வா

கோணாத ஒருவன்
கூனன் ஆனான் - ஏனாம்?

அவன்
டப்பா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை - ஏனாம்?

அவன்
உப்பில்லா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஆரோக்கிய மனிதத் தேவை
அரைகிராம் உப்புதானே

மனிதா

உப்பைக் கொட்டிக் கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே
செடி கொடியா நீ?
சிந்திக்கச் சொல்லுங்கள்

*

உண்மை இதுதான்

மனிதனைத் தேடி
மரணம் வருவதில்லை

மரணம் தேடியே
மனிதன் போகிறான்

டாக்டர்
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள் :

"பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?

மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?"

-வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக